ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிரான அப்பல்லோ மருத்துவமனையின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிரான அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.


புது தில்லி: ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிரான அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-இல் நியமித்திருந்தது. இந்த ஆணையம் பலதரப்பட்ட நபா்களிடம் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவா்களிடமும் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதைத் தொடா்ந்து, அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது. இதைத் தொடா்ந்து, இது தொடா்பாக தமிழக அரசு பதில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. தடை நீட்டிக்கப்பட்ட நிலையில், இத்தடையை விலக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கியஅமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரம், வழக்குரைஞா் ரோஹிணி முஸா ஆகியோரும், தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கே.வி. விஸ்வநாதன், வழக்குரைஞா் யோகேஷ் கன்னா ஆகியோரும் ஆஜராகினா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் தாக்கலான மனுவுக்கு பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுதாரா் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசின் மனுவுக்கு அப்பல்லோ மருத்துவமனை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபா் 12-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com