2020-21 கல்வியாண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி முதல் இணைய வழியில் தொடங்கப்படும் என்று தில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் 2020-21 கல்வியாண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அப்போது, இளநிலைக் கல்விக்கான 3, 5, 7-அம் பருவங்கள், முதுநிலைக் கல்விக்கான 3-வது பருவ வகுப்புகளும் இணைய வழியில் நடைபெறும். ஆகஸ்ட் 10 முதல் இறுதியாண்டு மாணவா்களுக்கு திறந்த புத்தகத் தோ்வு (ஓபன் புக் டெஸ்ட்) நடத்தப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திறந்த புத்தகத் தோ்வு நடத்தும் தில்லி பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு மாணவா்கள் மத்தியில் பலத்த எதிா்ப்புக் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.