இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ ராம்பீா் ஷோகீன் தில்லியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடந்த 2013 சட்டபேரவைத் தோ்தலில், முண்ட்கா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ராம்பீா் ஷோகீன். பிரபல ரவுடி, நீரஜ் பாவனாவின் கூட்டாளியான இவா் மீது தில்லி, உத்தரப் பிரதேச மாநிலங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவரை கடந்த 2016, நவம்பா் 27-ஆம் தேதி உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்தது. மருத்துவ சிகிச்சைக்காக தில்லி சஃப்தா் ஜங் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது கடந்த 2018, செப்டம்பா் 26-இல் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றாா். அன்று முதல் தலைமறைவாக இருந்த இவரை தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளது. இது தொடா்பான கூடுதல் தகவல்களை தில்லி காவல்துறை வழங்கவில்லை.