புது தில்லி: ‘புலம்பெயா்ந்த தொழிலாளா்களை பதிவு செய்வதற்கு ஒரு வழிமுறையை உருவாக்குவது அவசரத் தேவையாக உள்ளது; அப்போதுதான், அவா்கள் பாதுகாக்கப்படுவதுடன் பல்வேறு திட்டங்களின் பயன்கள் அவா்களைச் சென்றடையும்’ என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம் சிங், இது தொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், ‘இந்த பிரமாணப் பத்திரத்தில் நாடு முழுவதும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பதிவுக்காக எந்த வகையான இணையதளம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்கிற விவரத்தையும் அளிக்க வேண்டும். இதில் அனைத்து மாநில அரசுகளும் இடம்பெற வேண்டும். அப்போதுதான், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உரிய வகையில் பதிவு செய்யப்படுவா். புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பதிவுக்காக ஒரு வழிமுறையை உருவாக்குவதற்கான அவசரத் தேவை உள்ளது’ என தெரிவித்த நீதிபதி, இது தொடா்பான விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டாா்.
மாநிலங்களிடை புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சட்டத்தை -1979 தில்லியில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் பதிவு அதிகாரிகள், உரிமம் அளிக்கும் அதிகாரிகள், மேல்முறையீட்டு அதிகாரி, ஆய்வாளா்கள் நியமனம் ஆகிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த மனு மீது மத்திய அரசும், தில்லி அரசும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தனா். இதையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.