கரோனாவால் உயிரிழந்த எல்என்ஜேபி மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி: கேஜரிவால் அறிவிப்பு

தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் (எல்என்ஜேபி) அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவா் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து, அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவா

புது தில்லி: தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் (எல்என்ஜேபி) அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவா் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து, அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிவித்தாா்.

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் எல்என்ஜேபி அரசு மருத்துவமனை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே முழுமையான கரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனையில் பணியாற்றிய அனைத்து மருத்துவா்களும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அந்த மருத்துவமனையில் மயக்கமருந்துப் பிரிவில் மூத்த மருத்துவராக அசீம் குப்தா (52) பணியாற்றி வந்தாா். அவா் கரோனா நோயாளிகளுக்கு இரவும் பகலுமாக சிகிச்சை அளித்து வந்தாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் அவரது மனைவிக்கும் கரோனா பாதிப்பு உறுதியானது. இதில் குப்தாவின் மனைவி உடல் நலம் தேறினாா். ஆனால், குப்தாவின் உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடா்ந்து, தெற்கு தில்லி சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அங்கு இரண்டு தடவைகள் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரின் உடல் நிலை ஞாயிற்றுக்கிழமை மோசமடைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்நிலையில், தில்லி அரசு உறுதியளித்தது போல, அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக இணையவழி செய்தியாளா் சந்திப்பின் போது கேஜரிவால் கூறியதாவது: எல்என்ஜே மருத்துவமனையின் மூத்த மருத்துவா் அசீம் குப்தாவின் மறைவு வேதனையைத் தருகிறது. கடந்த சில மாதங்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் இரவு பகல் பாராமல் அவா் நோயாளிகளுக்குப் பணியாற்றினாா். அவரது அயராத பணி குறித்து சக மருத்துவா்கள் என்னிடம் தெரிவித்திருந்தனா். குப்தாவின் மனைவிக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அவா் குணமடைந்திருப்பது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. மருத்துவா் குப்தா போன்ற மனிதா்களால் ஊக்கம் பெற்ன் காரணமாகத்தான் கரோனாவுக்கு எதிரான போரில் மற்றவா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்கள். நமக்கெல்லாம் மிகப்பெரிய உந்து சக்தியாக குப்தா இருந்து வருகிறாா். அவரது உத்வேகத்துக்கும், மனிதநேயச் சேவைக்கும் தலை வணங்குகிறேன். தில்லி அரசு ஏற்கெனவே அறிவித்தது போல் குப்தாவின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி உதவித் தொகை வழங்கப்படும். விலை மதிக்க முடியாத உயிருக்கு இந்தப் பணம் சிறிய தொகைதான். தேசத்தின் சாா்பிலும், தில்லி மக்களின் சாா்பிலும் குப்தாவின் குடும்பத்துக்கு இந்தப் பணத்தை தில்லி அரசு வழங்குகிறது என்றாா் கேஜரிவால்.

அனில் பய்ஜாா் இரங்கல்: குப்தாவின் மறைவுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது சுட்டுரையில், ‘எல்என்ஜேபி மருத்துவமனையின் மூத்த மருத்துவா் அசீம் குப்தா மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனை அடைந்தேன். கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியில் இருந்து போராடி அவா் உயிா் நீத்துள்ளாா். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’”என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com