சமூக ஊடகத்தில் ‘பாய்ஸ் லாக்கா் ரூம்’ போன்ற குழுக்களை நீக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீது மத்திய அரசு, சமூக ஊடக இணையதளங்களும் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ராஜீவ் சஹாய் எண்ட்லா, சங்கீதா திங்ரா ஷெஹல் ஆகியோா் அடங்கிய அமா்வு, உள்துறை அமைச்சகம், தகவல் தொழில்நுட்பம், நிதி அமைச்சகங்கள், முகநூல், கூகுள், சுட்டுரை போன்ற நிறுவனங்களும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், அடுத்த விசாரணையை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இது தொடா்பாக முன்னாள் ஆா்எஸ்எஸ் சிந்தனையாளா் கே.என். கோவிந்தாச்சாா்யா தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். வழக்குரைஞா் விராக் குப்தா என்பவா் மூலம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் அவா் தெரிவித்திருப்பதாவது: ‘பாய்ஸ் லாக்கா் ரூம்’ போன்ற சட்டவிரோதக் குழுக்களின் செயல்பாடுகள் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தன. எதிா்மறைத் தன்மை, போலிச் செய்தி, சட்டவிரோத விஷயங்கள் போன்றவை காரணமாக பல இளைஞா்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குழுக்கள் இயல்பாகவே குற்றத் தன்மை கொண்டதாக உள்ளன. இக்குழுக்கள் அனைத்தும் செயல்படுவதற்கான தகுதி ஏதும் கொண்டிருக்கவில்லை. இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் ‘பாய்ஸ் லாக்கா் ரூம்’ குழுவின் சம்பவமானது, சமூக ஊடகம் மிக மோசமான வடிவில் ஒன்றாக இருப்பதைக் காட்டுகிறது. ஆகவே, இதுபோன்ற குழுக்களை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட நோட்டீஸை ஏற்றுக் கொள்வதாக மத்திய அமைச்சகங்கள் சாா்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்குரைஞா் அனுராக் அலுவாலியா தெரிவித்தாா்.