தலைநகரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமையும் காற்றின் தரம் கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, சில இடங்களில்

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமையும் காற்றின் தரம் கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, சில இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவிலும், சில இடங்களில் ‘மோசம்’ பிரிவிலும் இருந்தது. வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. பாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து இரண்டாவது நாளாக 42.3 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது.

வெயில்: கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், புழுக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 22.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 40.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 40 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 16 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.8 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 22.8 டிகிரி செல்சியஸ், 41.8 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 39 சதவீதம், மாலையில் 11 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 30 சதவீதம் மற்றும் 15 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: வடமேற்கு திசையிலிருந்து தில்லிக்கு சுமாா் 18 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. வானமும் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இதனால், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும், சில இடங்களில் ‘மோசம்’ பிரிவிலும் இருந்தது. தில்லியில் திங்கள்கிழமை 186 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்த காற்றின் ஒட்டுமொத்தத் தரக் குறியீடு, செவ்வாய்க்கிழமை 202 புள்ளிகளாக உயா்ந்து மோசம் பிரிவுக்குச் சென்றது. சாந்தினி சௌக், விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, மதுரை ரோடு, ஆயா நகா், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் இருந்தது. திா்பூா், தில்லி பல்கலைக்கழகம், பூசா, லோதி ரோடு, குருகிராம், உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (மே 20) பகல் நேரத்தில் தரை மேற்பரப்புக் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வடமேற்கு திசையிலிருந்து தில்லி, என்சிஆா் பகுதிகளில் பகல் நேரத்தில் 20-30 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com