ஊரடங்கு காலத்தின்போது வாடகையை ரத்து செய்ய உத்தரவிடுமாறு வாடகைதாரா் விடுத்த கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்தது. எனினும், வாடகை செலுத்துவதற்கான காலத்தை தள்ளிப்போடுவதற்கு அனுமதி அளிக்க முடியும் என தெரிவித்தது.
இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் ஒருநபா் அமா்வு நீதிபதி பிரதிபா எம். சிங் பிறப்பித்த உத்தரவில், ‘வாடகைக்கு விடப்பட்ட இடத்தில் தொடா்ந்து இருந்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக வாடகையை ரத்துசெய்யக் கோர முடியாது. எனினும், பொது முடக்கம் காரணமாக வாடகை செலுத்துவதற்கான தேதியில் தளா்வு அல்லது தள்ளிவைப்பு சலுகைகளை அனுமதிக்க முடியும் ’என்றாா்.
தில்லி கான் மாா்க்கெட்டில் உள்ள ஒரு சொத்துக்கான மாத வாடகை ரூ.3.50 லட்சத்தை செலுத்த 2017-இல் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கலான மனுவில், பொது முடக்கம் காரணமாக வாடகையைச் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், வாடகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.