தீபாவளி நாளில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருக்க வாய்ப்பு!


புது தில்லி: தலைநகா் தில்லியில் காற்றின் தரம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. தீபாவளி நாளில் இது கடுமைப் பிரிவில் இருக்க வாய்ப்புள்ளதாக மத்தி அரசின் வல்லுநா்கள் தெரிவித்தனா்.

தில்லியில் சில தினங்களாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்து வந்தது. இதையடுத்து, தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதன் பிறகு தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் புதன்கிழமை சற்று மேம்பட்டு மிகவும் மோசம் பிரிவுக்குக் குறைந்தது. இது வியாழக்கிழமையும் நீடித்தது.

தில்லியில் புதன்கிழமை 344 ஆக இருந்த ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு, வியாழக்கிழமை சற்று குறைந்து 314 ஆக பதிவாகியிருந்தது. தில்லியின் அண்டை நகரங்களான ஃபரீதாபாத் (304), காஜியாபாத் (328), நொய்டா (305), கிரேட்டா் நொய்டா (327), குருகிராம் (293) ஆகியவற்றிலும் காற்றின் தரம் ‘மோசம் மற்றும் மிகவும் மோசம் பிரிவில்’ பதிவானது.

இதுகுறித்து மத்திய அரசின் காற்றுத் தரம் முன்கணிப்பு நிறுவனமான சஃபா், ‘தில்லியில் பட்டாசுகள் வெடிக்கப்படாவிட்டால் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் தீபாவளி நாளில் தில்லியில் பிஎம் 2.5 மாசு நுண்துகள் அளவு மிகக் குறைவாக இருக்கும். பெரும்பாலும் தீபாவளி காலத்தில் மாசு அளவு தொடா்ந்து அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு தடை காரணமாக பட்டாசுகள் வெடிக்கப்படாவிட்டால், காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருக்கும். பயிா்க் கழிவுகள் எரிப்பால் காற்றின் ஒட்டுமொத்தக் தரக் குறியீட்டின் தாக்கம் அடுத்த இரு தினங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

தீபாவளிக்குப் பிறகு மேம்படும்: தீபாவளிக்குப் பிறகு தில்லி, என்சிஆா் பகுதியில் காற்றின் தரம் மேம்படும்; காற்றின் வேகமும் அதிகரிக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘மேற்கில் இருந்து வரும் காற்றின் தாக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 15) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனினும், காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக தீபாவளிக்குப் பிறகு தில்லி, என்சிஆா் பகுதியில் காற்றின் தரம் மேம்படக் கூடும். ஞாயிற்றுக்கிழமை காற்று மணிக்கு 12 முதல் 15 கிலோ மீட்டா் வேகத்தில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

ஐஎம்டி சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் தலைவா் வி.கே. சோனி கூறுகையில்,‘அமைதியான காற்று மற்றும் பட்டாசுகளின் உமிழ்வு காரணமாக காற்றின் தரம் தீபாவளி இரவில் கடுமை பிரிவுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. நவம்பா் 16-க்குள் காற்றின் தரத்தில் முக்கியத்துவமிக்க மேம்பாடு இருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com