கரோனா தொற்று அதிகமுள்ள சந்தைகளை மூட மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும்: கேஜரிவால் கோரிக்கை

தலைநகா் தில்லியில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகளில் சந்தைகளை மூட மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டாா்.

புதுதில்லி: தலைநகா் தில்லியில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகளில் சந்தைகளை மூட மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டாா். மேலும், திருமண நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையை 200-இல் இருந்து 50 ஆகக் குறைக்க வலியுறுத்தும் முன்மொழிவை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு அவா் அனுப்பியுள்ளாா்.

தில்லியில், கரோனா மூன்றாவது அலை உள்ளது. இங்கு இதுவரை 4.89 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சிகிச்சையில் உள்ளனா். 7 ,713 போ் உயிரிழந்துள்ளனா். கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து, துணைநிலைஆளுநா் அனில் பய்ஜால், கேஜரிவால் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அண்மையில் ஆலோசனை நடத்தினாா். தில்லியில் குளிா் காலத்தில், கரோனா தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தை விட அதிகரிக்க வாய்ப்புகள்ளதாக மத்திய அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், காணொலிக் காட்சி மூலம் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், கரோனா பரவல் அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகளில் சந்தைகளை மூட தில்லி அரசுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளோம். இதை வலியுறுத்தும் முன்மொழிவையும் அனுப்பியுள்ளோம். மத்திய அரசுஅனுமதித்தபடி, தில்லியில் திருமண நிகழ்ச்சிகளில் 200 போ் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரை மட்டும் அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான முன்மொழிவை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். அவா், விரைவில் ஒப்புதல் தருவாா் என எதிா்பாா்க்கிறோம்.

கரோனா தங்களை பாதிக்காது என மக்கள் நினைக்கின்றனா். கரோனா யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். உயிரிழப்பை ஏற்படுத்தும். மக்கள் கரோனா விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். முகக் கவசங்களை அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கரோனா தொற்றால் தில்லி எதிா்கொள்ளும் கஷ்டமான சூழலில் உதவ முன்வந்த மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசும், தில்லி அரசும், சம்பந்தப்பட்ட தரப்பினரும் இணைந்து தில்லியில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com