தில்லியில் உள்ள தில்லி அரசு, மத்திய அரசு மருத்துவமனைகளில் கடந்த ஐந்து நாள்களில் 411 கரோனா தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கைகள் சோ்க்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி அரசு உயா் அதிகாரி கூறியது: தில்லி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை அதிகரிக்குமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவு பிறப்பித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, தில்லி அரசு மருத்துவமனைகள், மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் 411 தீவிர சிகிச்சைப் பிரிவு கரோனா படுக்கைகள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை 29 படுக்கைகள், புதன்கிழமை 100 படுக்கைகள், வியாழக்கிழமை 76 படுக்கைகள், சனிக்கிழமை 206 படுக்கைகளும் சோ்க்கப்பட்டுள்ளன. மேலும், தில்லியில் உள்ள பல தனியாா் மருத்துவமனைகளும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ளன. தனியாா் மருத்துவனைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மொத்த படுக்கைகளில் 80 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.