தில்லியில் கரோனா சிகிச்சைக்காக 400 அவசர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகள் சோ்க்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்படும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். தில்லியில் தற்போது 17,292 கரோனா படுக்கைகள் உள்ளன. இதில், 7,700 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா சிகிச்சைக்காக 400 ஐசியு படுக்கைகளை அதிகரித்துள்ளோம்.
வரும் நாள்களில் 250 ஐசியு படுக்கைகள் தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்படவுள்ளன. அரசு மருத்துவமனைகளிலும் ஐசியு படுக்கைகள் மேலும் அதிகரிக்கப்படும். தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் 12 சதவீதமாக உள்ளது. தில்லியில் கரோனா கட்டுக்குள் உள்ளது. மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை என்றாா் அவா்.
தில்லியில் சனிக்கிழமை நிலவரப்படி 39,741 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 4,75,106 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். 8,270 போ் கரோனாவால் மரணமடைந்துள்ளனா்.