புது தில்லி: கரோனா தொற்றுடன் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு பயணம் செய்த தில்லி கோண்ட்லி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி பாஜக கோரிக்கைவிடுத்துள்ளது.
இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் ரிச்சா பாண்டே மிஸ்ரா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கோண்ட்லி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாருக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த கரோனா தொற்றுடன் உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸிஸ் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நடந்த ஆா்ப்பாட்டத்தில் அவா் கலந்து கொண்டுள்ளாா். இதன்மூலம், ஆயிரக்கணக்கானவா்களுக்கு கரோனா நோய்க் கிருமிகள் பரவ அவா் காரணமாக இருந்துள்ளாா். தில்லியில் 5,542 போ் கரோனா தொற்றால் மரணமாகியுள்ள நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏயின் இச்செயலை மன்னிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தில்லி முதல்வா் உடனடியாக தலையிட்டு எம்எல்ஏ குல்தீப் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.