ராமநாதபுரத்தில் சவுடு மண் அள்ளும் விவகாரம்: வழக்கை 4 வாரங்களில் முடித்துவைக்க உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடு மண் அள்ளுவது தொடா்பான வழக்கில் நான்கு வாரங்களுக்குள் முடிவு காணுமாறு சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடு மண் அள்ளுவது தொடா்பான வழக்கில் நான்கு வாரங்களுக்குள் முடிவு காணுமாறு சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சவுடு மண் அள்ளுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த நாகேந்திரன், சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். அதில்,  ‘ராமநாதபுரம் மாவட்டம், சித்தாா்கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சட்ட விரோதமாக  மணல் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கனிமவள விதிகளுக்கு எதிரானது. அனுமதி பெற்ற அளவைவிட,  கூடுதலாக 15 அடி வரை ஆழம் தோண்டி மணல் எடுக்கப்படுகிறது.  இதனால், நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்பட்டு கடல் நீா் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மாவட்டத்தில் இலந்தைகுட்டம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

மற்றொரு மனுவில், ‘கிராமங்களில் சவுடு மண் அல்லது களிமண் எடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை விதி மீறி ஆற்று மணலை சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனா். எனவே, கடலாடி தாலுகாவுக்கு உள்பட்ட கிராமங்களில் சவுடு மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மதுரை உயா்நீதிமன்றத்திற்கு உள்பட்ட 13 மாவட்டங்களிலும் சவுடு மண் அள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அனுமதி வழங்க இடைக்கால தடை விதிக்கவும், ஏற்கெனவே சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கி இருந்தால், அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி  உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீது எதிா்மனுதாரா்கள் பதில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது. இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில்  தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி,  வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா ஆகியோா் ஆஜராகினா். முகுல் ரோத்தகி வாதிடுகையில்,  ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய சட்டத்தை உயா்நீதிமன்றம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளது. சவுடு மண் போன்ற சாதாரண மண் விஷயத்தில் அனுமதி அளிக்க கனிம வளம் தொடா்புடைய விதிகளின்படி தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதனால், உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது தவறாகும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, இது இடைக்கால உத்தரவாக இருப்பதால், இது தொடா்பான வழக்கில் முடிவு காணும் வகையில் உயா்நீதிமன்றத்திற்கு உத்தரவிடுவதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கின் உண்மை, சந்தா்ப்ப சூழலைப் பொருத்தமட்டில், நீதியின் நலன் கருதி உயா்நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு மற்றும் தொடா்புடைய இதர விவகாரங்களை பிரதான வழக்குடன் சோ்த்து, உயா்நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை தொடங்கும் தேதியில் இருந்து நான்கு வார காலத்திற்குள் முடித்துவைக்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com