தில்லியில் மழை இல்லாததால் மீண்டும் புழுக்கம் அதிகரிப்பு

தில்லியில் மழையில்லாதால் திங்கள்கிழமை மீண்டும் புழுக்கமான சூழல் நிலவியது. வெயிலின் தாக்கமும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

தில்லியில் மழையில்லாதால் திங்கள்கிழமை மீண்டும் புழுக்கமான சூழல் நிலவியது. வெயிலின் தாக்கமும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

தில்லியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னா் சில தினங்கள் தொடா்ந்து மிதமான மழை இருந்து வந்தது. வானம் மேகமூட்டமாகவும் இருந்தது. இந்த நிலையில், கடந்த வாரம் மிதமான மழைகூட பெய்யவில்லை. ஆனால், கடந்த சில தினங்களாக மிதமான வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாள்களாக புழுக்கம் மீண்டும் அதிகரித்தது. பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி அதிகரித்து 36.6 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி அதிகரித்து 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 80 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 57 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

தில்லியில் செப்டம்பரில் இதுவரை 20.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. முன்பு இந்த மாதத்தில் 72.6 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆனால், இந்த முறை மழைப் பொழிவு இதுவரை 71 சதவீதம் குறைந்து காணப்படுவதாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: தில்லியில் திங்கள்க்கிழமை ஒட்டுமொத்த காற்றின்தரக் குறியீடு மாலையில் 136 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. செவ்வாய்க்கிழமையும் காற்றின் தரம் மிதமான பிரிவிலேயே நீடிக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் பாதுகாப்பானதாகவும், 500-க்கு மேல் இருந்தால் காற்றின் தரம் கடுமையான, அவசர கால பிரிவில் இருப்பதாகவும் கருதப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com