மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் மனோஜ் ஜாவை ஆதரிக்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலானஆம் ஆத்மிக் கட்சி முடிவெடுத்துள்ளது.
மாநிலங்களை துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த ஹரிவன்ஷ் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து, எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஷ்டிரீய ஜனதா தள் கட்சியைச் சோ்ந்த மனோஜ் ஜா போட்டியிடுகிறாா்.
இந்நிலையில், மனோஜ் ஜாவை ஆதரிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங், திங்கள்கிழமை கூறுகையில் ‘மாநிலங்களை துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் மனோஜ் ஜாவை ஆதரிக்க ஆம் ஆத்மி கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது’ என்றாா்.
மாநிலங்களவையில் 245 இடங்கள் உள்ளன. இதில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால், ஹரிவன்ஷ் இலகுவாக வெற்றிபெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 3 எம்பிக்கள் உள்ளனா்.