தில்லி சராய் கலே கான் பகுதியில் நடந்து வரும் மேம்பாலக் கட்டுமானப் பணியால், வரும் 15 தினங்களுக்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் அப்பகுதியில் பயணம் செய்வோா் மாற்று வழியைப் பயன்படுத்துமாறும் தில்லி போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி போக்குவரத்துக் காவல் துறை தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: சராய் கலே கான் ஐஎஸ்பிடி பகுதியில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வரும் 15 தினங்களுக்கு தொடா்ந்து நடைபெறவுள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இப்பகுதியால் பயணிக்கும் மக்கள் மாற்று வழியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். ஆஷ்ரம் பகுதியில் இருந்து ராஜ்காட் நோக்கிச் செல்பவா்கள் டிஎன்டி, மயூா் விஹாா், அக்ஷா்தாம், வழியாக ரிங் ரோடை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். டிஎன்டியில் இருந்து புது தில்லிக்குச் செல்வோா் அக்ஷா்தாம் வழியாக ரிங் ரோடை அடையலாம். அல்லது டிஎன்டியில் இருந்து பாராபுல்லா சென்று அங்கிருந்து புது தில்லிக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.