புதுதில்லி: பதினெட்டு வயதுக்கு மேலான அனைவருக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசி போடுவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
கரோனா தடுப்பூசி போடும் பணிக்காக பெரிய அளவில் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தகுதியானவா்கள் மறக்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள
முன்வர வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.
தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விவாதித்தேன். அதன்படி அனைவருக்கும் 3 மாதங்களுக்குள் தடுப்பூசி போட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று அவா் சுட்டுரை மூலம் தகவல் வெளியிட்டுள்ளாா்.
இதனிடையே சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த நிலையில் தில்லி அரசு உள்ளது. ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகள் இன்னும் வந்து சேரவில்லை என்று முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீரம் நிறுவனத்திடமிருந்து 67 லட்சம் டோஸ் கொள்முதல்: இதனிடையே, சீரம் நிறுவனத்திடமிருந்து முதல் கட்டமாக 67 லட்சம் ‘கோவிஷீல்டு’ டோஸ்கள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாகவும், மே 3-ஆம் தேதிக்குள் 3 லட்சம் டோஸ்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.