தில்லியில் உள்ள ஆகாஷவாணி பவன் கட்டடத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத்துறை இயக்குநா் அதுல் கா்க் மேலும் தெரிவித்ததாவது:
நாடாளுமன்றச் சாலையில் அமைந்துள்ள ஆகாசவாணி பவன் கட்டடத்தின் முதலாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக ஞாயிற்றுகிழமை காலை 5.57 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் நாலாபுறமும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.
முதல் தளத்தில் உள்ள 101-ஆம் எண் அறையில் இருந்து தீ பரவியது. சில மின் சாதனங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணைநடைபெற்று வருகிறது என்றாா் அவா்.