தில்லியில் இரு தினங்களாக மழையில்லாமல் இருப்பதாலும், பகலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவைவிட 3 டிகிரி அதிகரித்திருந்ததாலும் வெள்ளிக்கிழமை மாலை புழுக்கம் காணப்பட்டது.
தில்லியில் வழக்கமாக ஜூன் இறுதியில் பருவமழை பெய்யத் தொடங்கும். இந்த நிலையில், 16 நாள்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதன்கிழமை மழைநீடித்தது. ஆனால், இரு தினங்களாக மழை இல்லை. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமையும் பகலில் வெயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், மாலையில் புழுக்கம் நிலவியது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் மழை ஏதும் பதிவாகவில்லை.
தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி அதிகரித்து 37.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 79 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 56 சதவீதமாகவும் இருந்தது.
ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணி அளவில் 85 புள்ளிகளாக பதிவாகி திருப்தி பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் சனிக்கிழமை (ஜூலை 17) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.