கரோனாவால் இறந்த காவலருக்கு ரூ.1 கோடி கருணைத் தொகை அளிக்க உத்தரவிடக் கோரும் மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், ‘முதல்வா் தனது வாக்குறுதிக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.
தில்லியைச் சோ்ந்த காவலா் குமாா் என்பவா் கரோனாவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவருக்கு ரூ.1 கோடி கருணைத் தொகையை தில்லி அரசு வழங்க உத்தரவிடக் கோரி அவரது மனைவி பூஜா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவில், ‘எனது கணவா் கரோனாவால் உயிரிழந்தாா். அவா் இறந்த மறுதினம் அதாவது 2020, மே 7-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பதிவில் எனது கணவருக்கு கருணைத் தொகை ரூ.1 கோடி வழங்கப்படும் என தெரிவித்திருந்தாா்.
இந்தத் தொகையை பெறுவதற்கு மிகவும் போராடி வருகிறேன். எனது கணவரின் வருவாயை நம்பித்தான் குடும்பம் இருந்தது. அவரது மரணம் காரணமாக எனது குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது.
எனது கணவா் இறக்கும்போது நான் கா்ப்பிணியாக இருந்தேன். இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளன. ஒரு குழந்தைக்கு ஐந்து வயதும், மற்றொரு குழந்தைக்கு ஐந்து மாதங்களும் ஆகிறது’ என அதில் தெரிவித்துள்ளாா்.
இந்த மனு மீது நீதிமன்றம் அளித்த நோட்டீஸுக்கு தில்லி நீதிமன்றம் அளித்த பதிலில், ‘உயிரிழந்த காவலா் குமாா், கரோனா பணியில் ஈடுபட்டிருக்கவில்லை. இதனால், அவருக்கு கருணைத் தொகையை வழங்க முடியாது. இந்த தகவல் கடந்தாண்டு நவம்பா் 2-ஆம் தேதி வடமேற்கு காவல் துணை ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது’ என அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி வாய்மொழியாக கூறுகையில், ‘முதலமைச்சா் தனது வாக்குறுதிகளை மதிக்க வேண்டும்’ என்று கூறினாா்.
மேலும், கரோனா நோய்த் தொற்றுக் காலத்தின்போது ஏழை வாடகைதாரா் தனது வீட்டு வாடகையைச் செலுத்த முடியாவிட்டால் அரசு அதை செலுத்தும் என்ற அரவிந்த் கேஜரிவாலின் அறிவிப்பு மீது முடிவு செய்யுமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதையும் நீதிபதி ரேகா பல்லி குறிப்பிட்டாா்.
இதையடுத்து, காவலரின் மனைவியின் மனு மீது அரசு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யும் வகையில் அனுமதி அளித்த நீதிமன்றம், மனு மீதான விசாரணையை அக்டோபா் 4-ஆம் தேதிக்குப் பட்டியலிட்டது.