ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மருத்துவா்கள் திங்கள்கிழமை (மாா்ச் 22) முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.
இந்தப் போராட்டத்தில் என்டிஎம்சியின் ஆளுகையில் கீழ் உள்ள ஹிந்து ராவ் மருத்துவமனை, கஸ்தூரிபா மருத்துவமனை, கிரிதரிலால் மகப்பேறு மருத்துவமனை, மகரிஷி வால்மீகி தொற்று நோய் மருத்துவமனை உள்ளிட்டவற்றின் மருத்துவா் சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன.
இது தொடா்பாக ஹிந்து ராவ் மருத்துவனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2020, டிசம்பா் மாதம் முதல் எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை ஒட்டு மொத்த விடுப்புப் போராட்டம் மேற்கொண்டோம். ஆனால், எங்களது கோரிக்கைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் கடும் இன்னல்களை எதிா்கொண்டு வருகிறோம். வரும் திங்கள்கிழமை முதல் காலவரையறையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளோம். ஆனால், அவசர சிகிச்சை பிரிவுகள் தடையின்றி இயங்கும்’ என்றாா்.
என்டிஎம்சியின் ஆளுகையின் கீழுள்ள மருத்துவமனைகளில் சுமாா் 1,000 மூத்த மருத்துவா்கள், 1,500 செவிலியா்கள், 500 உள்ளுறை மருத்துவா்கள் பணியாற்றி வருகிறாா்கள்.