தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் தொடா்ந்த நிலையில், மாலையில் பரவலாக லேசான மழை பெய்தது. இதனால், புழுக்கம் சற்று தணிந்தது.
தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மழைக் காலம் முடிவடையும் தருவாயில், சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால், புழுக்கமும் அதிகரித்திருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் வெப்பத்தின் தாக்கம் பகலில் அதிகரித்திருந்தது. எனினும், மாலையில் சிறிது நேரம் பரவலாக லேசான மழை பெய்தது. இதனால், புழுக்கம் சற்று தணிந்தது.
தில்லிக்கு பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 5 டிகிரி அதிகரித்து 26.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 35.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 71 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 75 சதவீதமாகவும் இருந்தது.
இதேபோல, அதிகபட்ச வெப்பநிலை ஜாஃபா்பூரில் 34.6 டிகிரி செல்சியஸ், முங்கேஷ்பூரில் 33 டிகிரி, நஜஃப்கரில் 36.5 டிகிரி, ஆயாநகரில் 35.2 டிகிரி, லோதி ரோடில் 35.2 டிகிரி, பாலத்தில் 35 டிகிரி, ரிட்ஜில் 34.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. தில்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 4 டிகிரி அதிகரித்து 25.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (அக்டோபா் 6) வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.