கிழக்கு மற்றும் வடகிழக்கு தில்லியில் 2,038 மரங்கள் கொண்ட 14 ஹெக்டோ் வனப்பகுதி ஆறு வழிச் சாலை அமைப்பதற்காக மாற்றப்படவுள்ளது.
தில்லி - சஹரன்பூா் இடையே 14.75 கிமீ நீளமுள்ள ஆறு வழிப்பாதை சாலை அமைப்பதற்காக தில்லி வனத் துறையிடம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ), அனுமதி கோரியுள்ளது. அக்ஷா்தாம் என்எச் -9 சந்திப்புக்கும், தில்லி - உத்தரப் பிரதேச மாநில எல்லைக்கும் இடையே வனப் பகுதியில் மொத்தம் 2,038 மரங்கள் உள்ளன. இவற்றில் ஷீஷாம், சஹ்தட், பீபால், சம்பா, அசோக், சுபாபுல், வேம்பு, யூகலிப்டஸ், கிகாா், பொ், ஜாமூன் மற்றும் குலா் ஆகிய மரங்களும் அடங்கும்.
ரூ.1,500 கோடி மதிப்பிலான இந்த 6 வழிச் சாலைத் திட்டம் பாரதமாலா பரியோஜனாவின் முதலாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும். நாட்டின் இரண்டாவது பெரிய நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தின் கீழ் 50,000 கி.மீ. சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்தத் திட்டம் வனப்பகுதி நிலத்தில் வருகிறது. அதனால், இந்த வனப் பகுதியை மாற்றுவது தவிா்க்க முடியாதது என்று அந்த முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.
டிஎன்டி மகாராணி பாக் முதல் என்எச் -148 இன் ஜெய்த்பூா் - புஷ்டா சாலை பிரிவு சந்திப்பு வரை ஆறு வழிச்சாலை அமைப்பதற்காக 0.35 ஹெக்டோ் வனப் பகுதி நிலத்தை திசை திருப்பவும் மத்திய நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.