தில்லியில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்திருந்தது.
தில்லி மற்றும் தேசியத் தலைநா் வலயப் பகுதிகளில் குளிரின் தாக்கம் குறைந்து, வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை நரேலா பகுதியில் 40 டிகிரி செல்சியஸை கடந்து பதிவானது. இந்த நிலையில், தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் ஒரு டிகிரி அதிகரித்து 20.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 38.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 52 சதவீதமாகவும், மாலையில் 32 சதவீதமாகவும் இருந்தது.
இதேபோன்று மற்ற வானிலை ஆய்வு மையங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 38.4 டிகிரி, லோதி ரோடு பகுதியில் 37.2 டிகிரி, நரேலாவில் 38.4 டிகிரி, பாலத்தில் 38.5 டிகிரி, ரிட்ஜில் 38 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 244 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசமான’ பிரிவிலும், மாலை 8 மணியளவில் 304 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசமான’ பிரிவிலும் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 7) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.