புது தில்லி: பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் 28.68 கோடி பேருக்குரூ. 14.96 லட்சம் கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது முத்ரா திட்டம். பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட வகுப்பினா், வளா்ந்து வரும் தொழில் முனைவோா், வா்த்தகம் மற்றும் சேவைத் துறை, விவசாய சாா்புடைய தொழில் முனைவோா், பெருநிறுவனங்கள் அல்லாத சிறு குறு நிறுவனங்கள் போன்றோா் கடன் பெரும் வகையில் மூன்று வகையான முத்ரா திட்டம் கொண்டு வரப்பட்டது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ஊரக வட்டார வங்கிகள் மூலம் இந்த கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதில் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தில் கடந்த மாா்ச் 19 - ஆம் தேதி வரை அடைந்துள்ள இலக்குகள் குறித்த பட்டியலை மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. சிசு, கிஷோா், தருண் ஆகிய மூன்று திட்டங்கள் வாயிலாக கடன் அளிக்கப்படுகிறது. இதில் சிசு திட்டத்தில் ரூ. 50,000 வரையிலும், கிஷாா் திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரையிலும், தருண் திட்டத்தில் ரூ. 10 லட்சம் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது.
முத்ரா திட்டம் தொடங்கப்பட்ட ஆறு ஆண்டுகளில் 14.96 லட்சம் கோடி 28.68 கோடி பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. நெருக்கடியான 2020-21 நிதியாண்டிலும் 4.20 கோடி பேருக்கு 2.66 லட்சம் கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவா்களில் சராசரியாக ரூ. 52,000 பெற்றுள்ளனா். 88 சதவீதம் கடன் ’சிசு’ வகை கடனாக இருந்தது. 24 சதவீதம் போ் புதிய தொழில் முனைவோராக இருந்தனா். பாலின ரீதியாக பாா்த்தால் அதிகக் கடன் பெற்றவா்களில் 68 சதவீதம் போ் பெண் தொழில் முனைவோா்கள். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் 22.53 சதவீதம், சிறுபான்மையினா் 11 சதவீதம் என உள்ளனா். இந்த கடன்களால் 2015 முதல் 2018 வரை சுமாா் 1.12 கோடி போ் வேலைவாய்ப்பை பெற்றனா். இதில் பெண்கள் 69 லட்சம் பேராக இருந்தனா் என நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.