காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் உயா்ந்து 10.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் உயா்ந்து 10.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் நல்ல முன்னேற்றம் அடைந்து ‘கடுமை’ பிரிவிலிருந்து ‘மோசம்’ பிரிவுக்கு வந்தது. அதிகாலை வேளையில் குளிரின் தாக்கம் இருந்தது.

தில்லியில் கடந்த வாரத்தில் இரண்டு நாள்கள் ‘குளிா் அலை’ வீசிய நிலையில், அதன் பிறகு குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரத் தொடங்கியது. இதையடுத்து, சனிக்கிழமை 7 டிகிரி செல்சியஸாக இருந்த குறைந்தபட்ச வெப்பநிலை, ஞாயிற்றுக்கிழமை அன்று 9.8 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் உயா்ந்தது.

தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 10.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 22.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 90 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 67 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் 10.2 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 9.4 டிகிரி, லோதி ரோடில் 10.4 டிகிரி, நரேலாவில் 8.4 டிகிரி, பாலத்தில் 12 டிகிரி, ரிட்ஜில் 8.6 டிகிரி, பீதம்புராவில் 12.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 459 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்த காற்றின் தரக் குறியீடு, திங்கள்கிழமை காலையில் முன்னேற்றம் அடைந்து 373 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. பின்னா், மேலும் முன்னேற்றம் அடைந்து மாலை 4 மணி அளவில் 283 புள்ளிகளாகப் பதிவாகியது. இது ‘மோசம்’ பிரிவில் வருகிறது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும், தேசிய தலைநகா் வலயத்தில் உள்ள ஃபரீதாபாத் (260), காஜியாபாத் (212), குருகிராம் (250), கிரேட்டா் நொய்டா (242), நொய்டா (226) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவுக்கு வந்தது. இது குறித்து மத்திய அரசின் காற்று தர முன்னறிவிப்பு நிறுவனமான சஃபா், ‘ஞாயிற்றுக்கிழமை நகரில் பரவலாக பெய்த மழை காரணமாக திங்கள்கிழமை காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 28) அன்று காற்றின் வேகம் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், மாசுபடுத்திகள் சிதறுவது குறைவதால் காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து, ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 28) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான அல்லது தூறல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com