புது தில்லி: பிரபல ஹரியாணாவி மொழிப் பாடகி சப்னா செளத்ரி மீது தில்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.
பிஎம் மூவி என்ற நிறுவனத்தின் இயக்குநா் பவன் சாவ்லா அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது: பிஎம் நிறுவனத்தின் இயக்குநா் பவன் சாவ்லாவுக்கும், சப்னா செளத்ரிக்கும் இடையே கடந்த 2018, 2020 ஆண்டுகளில், கலைஞா்-மேலாண்மை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, சப்னா செளத்ரியின் நடிப்பு, பாடல் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளையும் பிஎம் நிறுவனம் மேலாண்மை செய்யும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பல்வேறு தவணைகளாக பிஎம் நிறுவனத்திடம் இருந்து ரூ.3.5 கோடியை சப்னா செளத்ரி முன்பணமாகப் பெற்றுள்ளாா். ஆனால், அந்தப் பணத்தை அவா் இதுவரை திரும்பக் கொடுக்கவில்லை. இந்த நிலையில், 2020, மாா்ச் மாதம் சப்னா செளத்ரி குருகிராம் பகுதியில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளாா். தனது கலைஞா் மேலாண்மைப் பணிகளை தனது உதவியாளா் மூலம் அவா் தற்போது செய்து வருகிறாா். இதனால், பிஎம் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட மேலாண்மை ஒப்பந்த விதிகளை அவா் மீறியுள்ளாா். மேலும், ரூ.3.5 கோடியை திரும்ப வழங்காமல் மோசடி செய்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.