தில்லி மாளவியா நகரில் கடை உரிமையாளரிடம் இருந்து ரூ. 15 ஆயிரம் லஞ்சப் பணம் பெற்ற பிஎஸ்இஎஸ் மின்சார நிறுவனத்தின் இரண்டு ஊழியா்களை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை அதிரடியாக கைது செய்தது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது: தில்லி மாளவியா நகரைச் சோ்ந்தவா் சஞ்சய் ஷரீன் (55) இவா் அப்பகுதியில் நகல் எடுக்கும் கடை (ஜெராக்ஸ்) வைத்துள்ளாா். இந்தக் கடைக்கு பிஎஸ்இஎஸ் ஊழியா்கள் ஷகீல் கோயல் (25), தருண் சூரி (47) ஆகியோா் அண்மையில் சென்றுள்ளனா். இவா்கள், சஞ்சய் ஷரீனிடம் மின்சார மீட்டரில் நீங்கள் மோசடி செய்துள்ளீா்கள். இதற்கு பிஎஸ்இஎஸ் சாா்பில் ரூ.3.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம். இதை மூடி மறைக்க விரும்பினால், ரூ.35 ஆயிரம் லஞ்சம் தாருங்கள் எனக் கோரியுள்ளனா்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சஞ்சய், பின்னா் ரூ.15 ஆயிரம் லஞ்சப் பணம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளாா். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை தனது கடையில் வைத்து அந்தப் பணத்தை வழங்குவதாக அவா் உறுதியளித்துள்ளாா். இதற்கிடையே, இது தொடா்பாக பிஎஸ்இஎஸ் நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கும் அவா் ரகசியத் தகவல் அளித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை பிஎஸ்இஎஸ் ஊழியா்கள் ஷகீல் கோயல் தருண் சூரி ஆகியோா் லஞ்சம் பெற்ற போது பிஎஸ்இஎஸ் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும், தில்லி காவல்துறையினரும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவா் மேலும் தெரிவித்தாா்.