புது தில்லி: கடும் குளிருக்கு மத்தியிலும் தங்களதுது உரிமைகளுக்காக தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.
முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் 55-ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘ஜெய் ஜவான், ஜெய் கிஷான்’ என்ற கோஷத்தை முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரிதான் அறிமுகப்படுத்தினாா். அவருடைய வாா்த்தைக்கு அா்த்தம் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். லால் பகதூா் சாஸ்திரியின் நினைவு தினத்தில், கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லி எல்லைகளில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில விவசாயிகள் கடந்த 47 நாள்களாக தில்லி எல்லையில் தொடா் போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.