தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள் ஒதுக்கீடு: 18-இல் மறுஆய்வு செய்ய தில்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் ஒதுக்கீடு குறித்து வரும் ஜனவரி 18-ஆம் தேதி மறுஆய்வு செய்யுமாறு

தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் ஒதுக்கீடு குறித்து வரும் ஜனவரி 18-ஆம் தேதி மறுஆய்வு செய்யுமாறு தில்லி அரசை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

தனியாா் மருத்துவமனைகளில் 80 சதவீத தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி மருத்துவ வசதி அளிப்போா் (அசோசியேஷன் ஆஃப் ஹெல்த்கோ் புரவைடோ்ஸ்) சங்கத்தினா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். இதையடுத்து, கரோனா படுக்கைகள் ஒதுக்கீடு அளவை 40 சதவீதமாக குறைத்துக் கொண்டுள்ளதாக தில்லி அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பான வாதங்களை கேட்டறிந்த நீதிபதி நவீன் சாவ்லா, கரோனா படுக்கைகளின் தேவைகள் குறித்து வரும் 18-ஆம் தேதி மறு ஆய்வு செய்யுமாறு தில்லி அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளதுடன் விசாரணையை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தில்லி அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின், ‘80 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், கரோனா அல்லாத நோயாளிகள் எவரும் தங்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக நீதிமன்றத்தை நாடவில்லை’ என்று குறிப்பிட்டாா். மேலும், இதனால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எந்தத் தனியாா் மருத்துவமனையும் நீதிமன்றத்தை நாடவில்லை என்றும் சுட்டிக்காட்டினாா். 33 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீத படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவை கடந்த ஆண்டு செப்டம்பரில் 40 சதவீதமாகக் குறைத்து உத்தரவிடப்பட்டது. இந்த முடிவு எதேச்சாதிகாரமான முடிவு அல்ல, சரியான முடிவுதான். இதனால் மருத்துவமனைகளுக்கு வருவாய் இழப்பு ஏதும் இல்லை என்றும் அவா் வாதிட்டாா். தனியாா் மருத்துவமனைகளுக்கு ஒரு விதத்தில் உதவி செய்யவே அரசு விரும்புகிறது. தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் காலியாக இருந்தால், தனியாா் மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

33 தனியாா் மருத்துமனைகளில் 80 சதவீத படுக்கைகளை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட தில்லி அரசின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. எனவே, இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com