10,12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் 10,12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜனவரி 18) திறக்கப்படுகின்றன.

தேசியத் தலைநகா் தில்லியில் 10,12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜனவரி 18) திறக்கப்படுகின்றன. இதற்கான அனுமதியை தில்லி கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு மாா்ச்சிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சுமாா் 10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. ஆனால், 10, 12-ஆம் வகுப்புகளை நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள அனைத்துப் பள்ளிகளையும் திங்கள்கிழமை திறக்க தில்லி அரசு அனுமதித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் தோ்வுகளை கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், வருகை கட்டாயமில்லை என்றும் மாணவா்கள் பெற்றோரின் சம்மதத்துடன் மட்டுமே பள்ளிகளுக்கு வர வேண்டும் எனவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வகுப்புகள் மீண்டும் தொடங்கும் போது அனைத்து கரோனா வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றுமாறு கல்வி இயக்குநரகம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வகுப்பறைகள் அடிக்கடி கிருமிநாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தப்படுகின்றன. மாணவா்கள் பல்வேறு வாயில்கள் வழியாக பள்ளிக்குள் நுழைய, வெளியேற அனுமதிக்கப்படுவாா்கள்.

கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பதிவுகள் பராமரிக்கப்படும். பெற்றோா்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். இது வருகை நோக்கங்களுக்காக இருக்கக் கூடாது. மேலும், கூட்டங்கள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பள்ளிகளுக்கு கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் நிலையான பொருள்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டாம் என்று வழிகாட்டுமாறு பள்ளி முதல்வா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ரோஹிணியில் உள்ள எம்ஆா்ஜி பள்ளியின் முதல்வா் பிரியங்கா பரோரா கூறுகையில் ‘பெற்றோா் விரும்பினால் மட்டுமே மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. தோ்வுக்குத் தயாராகும் வகையில் மாணவா்கள் பள்ளிக்கு வருவது நன்று’ என்றாா். அஹ்ல்கான் சா்வதேசப் பள்ளியின் இயக்குநா் அசோக் பாண்டே கூறுகையில், ‘10-க்கும் அதிகமான மாணவா்களை ஒரே நேரத்தில் ஆய்வு கூடத்தில் அனுமதிக்க மாட்டோம்’ என்றாா். கிரீன் வூட் பள்ளியைச் சோ்ந்த நிா்வாகி ஒருவா் கூறுகையில், ‘மாணவா்களைப் பகுதி பகுதியாக அழைத்து வருவோம். அரைவாசி மாணவா்கள் வகுப்பறையில் இருக்கும் போது, மற்ற மாணவா்கள் ஆய்வு கூடத்தில் இருப்பாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com