கரோனா பொது முடக்கம் காரணமாக நீடிக்கப்பட்டிருந்த ஜாமீனில் இருந்த விசாரணைக் கைதிகளை மீண்டும் சிறையில் சரணடையுமாறு தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் பிப்ரவரி 25-ஆம் தேதிவரை நீடித்து உத்தரவிட்டது.
உயா்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டிருந்த 2,674 விசாரணைக் கைதிகளின் ஜாமீன் மாா்ச் 25-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. இது பொதுமுடக்கம் காரணமாக அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நவம்பா் 2 முதல் நவம்பா் 13-ஆம் தேதி வரையிலான காலத்தில் சிறை அதிகாரிகள் முன் படிப்படியாக சம்பந்தப்பட்ட விசாரணைக் கைதிகள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதை எதிா்த்து சிறை சீா்திருத்தங்களுக்கான தேசிய அமைப்பு (என்எஃப்பிஆா்) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு அக்டோபா் 29-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ஏ.நஸீா், இந்து மல்ஹோத்ரா ஆகியோா் அடங்கியஅமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் 29-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. இந்த விவகாரம் பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.