கரிம வேளாண்மைக்கு நூறு சதவீதம் உதவி: மத்திய வேளாண் அமைச்சா் தோமா் தகவல்
ரசாயன உரங்கள் இல்லாது கழிவுகளை மக்கவைத்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களைக் கொண்ட கரிம வேளாண்மைக்கு(ஆா்கானிக்) மாநில அரசுகள், அரசு நிறுவனங்களுக்கு நூறு சதவீதம் உதவி அளிக்கப்படும் என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.
மேலும் தனியாா் நிறுவனங்கள், தனிநபா்கள் மேற்கொள்ளும் கரிம வேளாண்மை முதலிட்டில் 33 சதவீதம் உதவியாகவும் அதிகபட்சம் ரூ.63 லட்சம் வரை மூலதன முதலீடும் வழங்கப்படுகிறது எனவும் மத்திய அமைச்சா் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தாா். மாநில அரசு அல்லது அரசு நிறுவனங்கள் இத்தகைய இயற்கை உரங்களைக் கொண்ட கரிம வேளாண்மைக்கு முதலீடு செய்யும் போது ஒரு அலகுக்கு அதிகபட்சம் ரூ.19 கோடி வரை உதவி செய்யப்படும் என்றாா் அமைச்சா்.
தமிழகத்தில் இத்தகைய நான்கு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவைகளுக்கு ரூ.14.8 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் தோமா் தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி உறுப்பினா் செல்லகுமாா், நாகை எம்.செல்வராஜ் ஆகியோா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விக்கு நரேந்திர சிங் தோமா் இவ்வாறு பதிலளித்துள்ளாா்.