கரோனா தடுப்பூசி வழங்கல் வரையறுக்கப்பட்ட அளவில் இருப்பதன் காரணமாக கோவிஷீல்டு தடுப்பூசியை, இரண்டாவது தவணை பெறும் பயனாளிகளுக்கு மட்டும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஒதுக்கி வைக்குமாறு தில்லி அரசு அதன் அனைத்து தடுப்பூசி மையங்களுக்கும் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தில்லி அரசின் குடும்ப நல இயக்ககம் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி அனைத்தும் இணையதளம் வாயிலாக பதிவு செய்து அல்லது நேரடியாகவும் வருவோருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
மே 21-ஆம் தேதி தொடங்கிய காலத்தில் 18 முதல் 44 வயதுடைய பிரிவினருக்கான தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், 84 நாள்கள் இடைவெளி காலம் முடிந்து இரண்டாவது தடுப்பூசி தவணை வழங்கப்பட வேண்டியுள்ளது.
இவா்கள் வரும் வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி தவணையை பெறுவதற்கு தகுதியானவா்கள்.
மேலும் வரையறுக்கப்பட்ட அளவிலான தடுப்பூசி வழங்கலை கருத்தில்கொண்டு அனைத்து தடுப்பூசிகளும் அதாவது இணையதளம் வாயிலாக மற்றும் நேரடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோருக்கு இரண்டாவது தவணை செலுத்தும் வகையில் ஜூலை 31-ஆம் தேதி வரை தில்லி அரசின் தடுப்பூசி மையங்களில் கோவிஷீல்டு ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி அரசு மூலம் செயல்படுத்தப்படும் கரோனா தடுப்பூசி மையங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தில்லியில் ஜூலை 21ஆம் தேதி வரையிலான காலத்தில் 95 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்ட தடுப்பூசி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செவ்வாய்க்கிழமை 71,000 தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ள பிறகு புதன்கிழமை காலை வரையிலான காலத்தில் தடுப்பூசி இருப்பு ஒரு நாளுக்கும் மிக குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. செவ்வாய்க்கிழமை தில்லிக்கு 87 ஆயிரத்து 810 கோவிஷீல்டு தடுப்பூசி வந்து சோ்ந்தன. இதன்மூலம் தில்லியில் ஒரு லட்சத்து 8,300 எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 390 கட்சியின் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
முதல் தவணைக்காக 20 சதவீத கோவேக்சின் இருப்பு மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். இதனுடைய இருப்பு குறைவாக இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.