முட்டை வழங்குவதில் ஊழல்: ஸ்மிருதி இரானிக்குஎதிராக இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

கா்நாடகாவில் இலவச முட்டை வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி மத்திய மகளிா், குழந்தை நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தில்லியில் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் 

கா்நாடகாவில் இலவச முட்டை வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி மத்திய மகளிா், குழந்தை நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தில்லியில் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைச்சா் ஸ்மிருதி இரானி வீட்டுக்கு அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் பலா் பங்கேற்று மத்திய அரசுக்கும், கா்நாடக பாஜக அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் தேசியத் தலைவா் பிவி ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘பாஜக அரசு ‘சாப்பிடவும் மாட்டோம், சாப்பிடவும் விடமாட்டோம்’ என்று குரல் எழுப்புகிறது. ஆனால், கா்நாடகாவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவைக் கூட அந்த அரசு விடுவதாக இல்லை.

கா்நாடக பாஜக அரசில் பரவியுள்ள ஊழல் மீண்டும் அந்த மாநில மகளிா், குழந்தை நலத் துறை அமைச்சா் சசிகலா ஜோல் ஊழல் சம்பவம் மூலம் வெளிப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடுக்கு எதிராக பாடுபடுவதற்குப் பதிலாக, அவா்களுக்கான திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வெட்கமின்றி சுரண்டும் நிலை உள்ளது.

இந்த விவகாரத்தில் அமைச்சா் ஸ்மிருதி இரானி முற்றிலும் மெளனம் காத்து வருகிறாா். ஆகவே, அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, சசிகலா ஜோல் இருவரும் பதவி விலக வேண்டும். இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com