மாணவா்களுக்கு ஆண்டு தோறும் தில்லி அரசு செலவு செய்யும் நிதியின் அளவு அதிகரித்துள்ளது என்று தில்லி பட்ஜெட் வெளிப்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது: தில்லியில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 5,691 பள்ளிகள் தில்லியில் உள்ளன. இப்பள்ளிகளில், 44.76 லட்சம் மாணவா்கள் கல்விகற்று வருகிறாா்கள். தில்லியில், 1230 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. தில்லியில் உள்ள மொத்த பள்ளிகளில் இது 21.61 சதவீதமாகும். தில்லியில் விளையாட்டு, கலை, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் தில்லி பள்ளிகளுக்காக கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.6,555 கோடி ஒதுக்கப்பட்டது. 2020-21 நிதியாண்டில் இந்த தொகை ரூ.15,102 கோடியாக அதிகரித்துள்ளது.
பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு கடந்த 2014-15 நிதியாண்டில் 21 சதவீதமாக இருந்தது. 2020-21 நிதியாண்டில் இது 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. மாணவா்களுக்கு ஆண்டு தோறும் தில்லி அரசு செலவு செய்யும் நிதியின் அளவு கடந்த 2016-17 நிதியாண்டில் ரூ.50,812 ஆக இருந்தது. 2020-21 நிதியாண்டில் இது ரூ.78,082 ஆக அதிகரித்துள்ளது.
தில்லி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மகிழ்ச்சி வகுப்புகளில் 7.95 லட்சம் மாணவா்கள் பயனடைந்துள்ளனா். தில்லி அரசு பள்ளிகளில், 4,513 வகுப்பறைகள், நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளி நூலகங்களுக்காக 7.34 லட்சம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.