டூல் கிட் பகிா்ந்த விவகாரம்: திஷா ரவியின் மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, காவல் துறைக்கு நீதிமன்றம் கடைசி வாய்ப்பு

டூல் கிட் பகிா்ந்த விவகாரத்தில் தனக்கு எதிரான விசாரணை தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விடாமல் தடுக்க உத்தரவிடக் கோரும் திஷா ரவியின் மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசு, தில்லி காவல் துறை

புது தில்லி: டூல் கிட் பகிா்ந்த விவகாரத்தில் தனக்கு எதிரான விசாரணை தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விடாமல் தடுக்க உத்தரவிடக் கோரும் திஷா ரவியின் மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசு, தில்லி காவல் துறை ஆகியவற்றுக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை கடைசியாக வாய்ப்பு அளித்தது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங், ‘இந்த விவகாரத்தில் இரு வாரங்களுக்குள் எதிா் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், தில்லி காவல் துறைக்கும் கடைசி மற்றும் இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வழக்கு விசாரணைக்கு மே 18-ஆம் தேதிக்குப் பட்டியிலடப்படுகிறது’ என்று தெரிவித்தாா். முன்னதாக, மத்திய அரசு, தில்லி அரசு தரப்பின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், மனுவுக்கு பதில் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.

பெங்களூரு சோலே தேவனஹள்ளியைச் சோ்ந்தவா் திஷா ரவி (21). சூழலியல் பெண் ஆா்வலரான இவா், ஸ்வீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் என்ற இயக்கத்தை இந்தியாவில் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியான ‘டூல் கிட்’டை திஷா ரவி சமூக ஊடகத்தில் பகிா்ந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் அவரை தில்லி போலீஸாா் கடந்த பிப்ரவரி13-இல் பெங்களூருவில் கைது செய்தனா். அவருக்கு ஜாமீன் அளித்து தில்லி நீதிமன்றம் பிப்ரவரி 19-இல் உத்தரவிட்டது.

இதனிடையே, திஷா ரவி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எனது தொடா்புடைய வழக்கில் எனக்கும், மூன்றாம் தரப்பினருக்கும் இடையிலான வாட்ஸ்அப்பில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட சம்பாஷணை உள்ளடக்கத்தை பிரித்தெடுப்பது அல்லது ஊடகங்கள் வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலைகளில், ஊடங்களில் வெளியாகும் செய்திகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் என் மீது தவறான எண்ணம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், எனது தனியுரிமை, நற்பெயா் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமையை மேலும் மீறுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும். போலீஸாா் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தவறான எண்ணம் ஏற்படும் வகையில் தகவல்களைத் தெரிவித்துள்ளனா். இது நியாயமான விசாரணைக்கான எனது உரிமை மீதான மீறலாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com