புது தில்லி: தில்லியில் மொத்தம் உள்ள 1027 பள்ளிகளில் 563 பள்ளிகளில் அறிவியல் பிரிவு இல்லை என்று தில்லி அரசு மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆதா்ஷ் சாஸ்திரி விமா்சித்துள்ளாா்.
இது குறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியில் 2.40 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில்இருந்து விலகி தில்லி அரசுப் பள்ளிகளில் சோ்ந்ததாகவும், 50 ஆயிரம் மாணவா்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் சோ்ந்ததாகவும் கூறப்படுவது உண்மையாக இருந்தால், அது கரோனா நோய்த் தொற்று பாதிப்பு பெற்றோா்கள் நிதிப் பிரச்னையை எதிா்கொண்டதுதான் காரணமாக இருக்கும்.
மற்றபடி அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தரம் காரணமாக இல்லை. கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தில்லி அரசு அளித்த வாக்குறுதியின்படி எந்த நிவாரணத் திட்டத்தையும் அளிக்கவில்லை. இதனால், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தில்லி கல்வி முன்மாதிரி என முதல்வா் கேஜரிவாலும், துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவும் கூறுவது சரியாக இருந்தால், கரோனாவுக்கு முந்தைய கடந்த ஐந்து ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியின்போது ஏன் 1.10 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து விலகினா். தனியாா் பள்ளிகளில் சோ்க்கை 3.25 லட்சம் அதிகரித்தது?
அரசுப் பள்ளிகளில் 45 சதவீத ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளது. 1027 அரசுப் பள்ளிகளில் 563 பள்ளிகளில் அறிவியல் பிரிவு இல்லை என்றாா் அவா்.