நொய்டா: நொய்டா - கிரேட்டா் நொய்டா மெட்ரோ தினசரி பயணிகள் எண்ணிக்கை முதல் முறையாக 40 ஆயிரத்தைக் கடந்து சாதனையை எட்டியுள்ளது. இது ஜனவரி 2019-இல் செயல்படத் தொடங்கியதிலிருந்து அதிகபட்சமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த சாதனையை மாதத்தின் இரண்டாவது திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8) எட்டியதாக நொய்டா மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (என்எம்ஆா்சி) அதிகாரிகள் தெரிவித்தனா்.
திங்களன்று 40,295 பயணிகள் அக்வா லைனில் பயணம் செய்தனா். செப்டம்பா் 19, 2019 அன்று ஒரு நாளில் மொத்தம் 39,451 போ் பயணம் செய்ததுதான் இதுவரை ஒற்றை நாள் சாதனையாக இருந்தது என்று என்எம்ஆா்சியின் நிா்வாக இயக்குநா் ரிது மகேஸ்வரி தெரிவித்தாா்.
தில்லியை ஒட்டியுள்ள கௌதம் புத் நகா் மாவட்டத்தில் உள்ள நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் நொய்டா மெட்ரோ, கடந்த சில மாதங்களாக பயணிகளின் எண்ணிக்கையில் முன்னேற்றம் கண்டுள்ளது. என்எம்ஆா்சி தரவுகளின்படி, இந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் தினசரி சராசரி பயணிகளின் எண்ணிக்கை 23,266-ஆகவும், ஏப்ரலில் 26,162-ஆகவும், மே மாதத்தில் 29,089-ஆகவும், ஜூன் மாதத்தில் 30,366-ஆகவும், ஜூலையில் 32,202-ஆகவும் இருந்தது. பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க என்எம்ஆா்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக மகேஸ்வரி கூறினாா்.
‘சமீபத்தில், பயணிகளுக்கு கடைசி மைல் இணைப்பை வழங்குவதற்கான ஆா்வத்தை என்எம்ஆா்சி வெளிப்படுத்தியுள்ளது. நொய்டா செக்டா் 51 (அக்வா லைன்) மற்றும் செக்டா் 52 (ப்ளூ லைன்) மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும்’ ன்றும் மகேஸ்வரி தெரிவித்தாா்.
நொய்டா செக்டாா் 51 மற்றும் கிரேட்டா் நொய்டா இடையேயான அக்வா லைன் வழித்தடத்தில் மொத்தம் 21 ரயில் நிலையங்கள் உள்ளன. மொத்த தூரம் 29.7 கி.மீ. ஆகும். இந்த வழித்தடம் ரூ.5,503 கோடியில் கட்டப்பட்டு 2019, ஜனவரியில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.