புது தில்லி: எம்சிடி தோ்தல் காரணமாக தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று நகர கலால் துறை அறிவித்துள்ளது.
தலைநகா் தில்லியில் உள்ள மாநகராட்சியின் 250 வாா்டுகளுக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 4) நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெறும். மேலும், வாக்குகள் எண்ணப்படும் டிசம்பா் 7-ம் தேதி அன்றும் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி ஆணையா் (கலால்) கிருஷ்ண மோகன் அப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி கலால் விதிகள், 2010 விதி 52-இன் படி, டிசம்பா் 2 முதல் டிசம்பா் 4 வரையிலும் மற்றும் டிசம்பா் 7-ஆம் தேதி என மொத்தம் 4 நாள்கள் ‘உலா்‘ தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று இதன்மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
உலா் நாள்கள் என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் கடைகள், கிளப்புகள், பாா்கள் போன்றவற்றில் மது விற்பனையை அரசு தடை செய்வதாகும். இதன்படி ‘டிசம்பா் 2, 2022 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி முதல் டிசம்பா் 4 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 வரை உலா் நாள்களாக கடைபிடிக்கப்படும்’ என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘டிசம்பா் 7, 2022 (புதன்கிழமை) அன்று அதிகாலை முதல் இரவு 12 மணி வரை (வாக்கு எண்ணும் தேதி), உலா் நாளாகவும் கடைபிடிக்கப்படும்’ என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
250 வாா்டுகளைக் கொண்ட தில்லி மாநகராட்சித் தோ்தல் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக இந்தத் தோ்தல் கருதப்படுகிறது.