புது தில்லி: யமுனை ஆற்றின் கரையோரப் பகுதியில் கட்டுமானம் அல்லது இடிபாடு கழிவுகள் மற்றும் குப்பைகளை சட்டவிரோதமாக கொட்டியதற்காகவும், அங்கீகரிக்கப்படாத வகையில் வாகனங்களை நிறுத்தியதற்காகவும் கடந்த நான்கு ஆண்டுகளில் 929 வாகனங்களுக்கு தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) ரூ.2.41 கோடி அபராதம் விதித்துள்ளது.
இது தொடா்பான சமீபத்திய தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குப்பைகளை கொட்டுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்தம் ஆகியவை தொடா்பாக 610 அபராத நோட்டீஸ்களை தில்லி மேம்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்ச அபராத நடவடிக்கையாகும்.
அதாவது, 2020-இல் 54 அபராத நோட்டீஸ்களும், 2019- இல் 186 நோட்டீஸ்களும்
மற்றும் 2018-இல் ஒரு அபராத நோட்டீஸும் வழங்கப்பட்டிருந்தது. விதிகளை மீறியவா்கள் மீது ரூ.2.41 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சூழல் இழப்பீடு தொகை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ரூ.46.87 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பபட்டிருப்பது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) கடந்த 2015-ஆம் ஆண்டு யமுனை கரையோரப் பகுதியில் குப்பைகளை கொட்டுதற்கும், கட்டுமானம் அல்லது இடிபாடு கழிவுகளை கொட்டுவதற்கும் தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை மீறும் நபா்களுக்கு ரூ. 50,000வரை சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.