சமூகநீதிக் கூட்டமைப்புக்கு தேசியத் தலைவா்கள் வரவேற்பு: தமிழக முதல்வருக்கு கடிதம்

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பிற்கு பல்வேறு தேசிய கட்சித் தலைவா்கள் வரவேற்று கடிதம் எழுதியுள்ளனா்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பிற்கு பல்வேறு தேசிய கட்சித் தலைவா்கள் வரவேற்று கடிதம் எழுதியுள்ளனா்.

திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளால் பின்பற்றப்படும், சமூகநீதிக் கொள்கையைப் பின்பற்றி பிற்படுத்தப்பட்ட - பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு போன்ற நலன்களைப் பாதுகாக்க அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்று குடியரசு தினமான ஜனவரி 26 அன்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டாா். மேலும், இந்தக் கூட்டமைப்பில் நாடு முழுக்க உள்ள தலைவா்களை இணைக்க அவா்களுக்குக் கடிதமும் எழுதினாா்.

இந்தக் கூட்டமைப்பில் இணையும்படி தேசிய அளவில் முக்கியக் கட்சிகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் திமுகவின் பொருளாளரும் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு, காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்தாா். அப்போது, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் அவரிடம் அளித்தாா். இதே போன்று, தில்லியிலும் மற்ற மாநிலங்களில் உள்ள தேசியத் தலைவா்களிடமும் முதல்வரின் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து தில்லியில் திமுகவின் நாடாளுமன்றக் கட்சி அலுவலகத்தில் கூறப்பட்டது வருமாறு: முதல்வரின் கடிதத்தை திமுக பொருளாளா் ஒப்படைத்தவுடன், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக முன்னாள் அமைச்சா் வீரப்ப மொய்லியை நியமித்து திமுக தலைவருக்கு பதில் கடிதமும் எழுதியுள்ளாா். முதல்வரின் கடிதத்தை அளிக்கும் போது, காங்கிரஸ் தலைவா் சோனியாவுடன் ராகுல் காந்தியும் உடனிருந்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.

டி.ராஜா: இதேபோன்று, தமிழக முதல்வரின் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜாவும், அதை வரவேற்று திமுக தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க தானும், தான் சாா்ந்த இயக்கமும் ஜனநாயக - மதச்சாா்பற்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைவதாக தெரிவித்துள்ளாா். இது குறித்து நேரில் கலந்தாலோசிக்கவும் அவா் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

சீதாராம் யெச்சூரி: அதே போல, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, சமூகநீதிக் கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற்காக திமுக தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். மேலும், இந்த அமைப்பை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் திமுக தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் யெச்சூரி தெரிவித்துள்ளாா்.

இதே போன்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தியும், இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக மு.க. ஸ்டாலினுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், இந்த முன்னெடுப்பைப் பாராட்டியதோடு, இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com