பருவமழை ஜூன் 27-க்குள் தில்லியை வந்தடைய வாய்ப்பு!: ‘ஸ்கைமேட்’ தகவல்

தேசியத் தலைநகா் தில்லியில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 27-ஆம் தேதிக்குள் வருவதற்கு அதிக வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 27-ஆம் தேதிக்குள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக காலநிலை மாற்றம் மற்றும் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமேட்டின் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளாா்.

லோதி ரோடில் 15.8 மி.மீ. மழை பதிவு: தில்லியில் சனிக்கிழமை சனிக்கிழமை காலை முதல் மேகமூட்டமாக இருந்தது. அதிகாலை வேளையில் நகரில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 13 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல, ஜாஃபா்பூரில் 0.5 மி.மீ., நஜஃப்கரில் 1 மி.மீ., ஆயாநகரில் 8.4 மி.மீ., லோதி ரோடில் 15.8 மி.மீ., நரேலாவில் 8 மி.மீ., பாலத்தில் 9.5 மி.மீ., ரிட்ஜில் 8.8 மி.மீ., பீதம்புராவில் 1 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 0.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: இந்த நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி குறைந்து 24.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 7 டிகிரி குறைந்து 32.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 90 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 62 சதவீதமாகவும் இருந்தது. தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 33.7 டிகிரி, நஜஃப்கரில் 34.9 டிகிரி, ஆயாநகரில் 32.5 டிகிரி, லோதி ரோடில் 32.2 டிகிரி, பாலத்தில் 32.3 மி.மீ., ரிட்ஜில் 32.7 மி.மீ., பீதம்புராவில் 33.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 30.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. தலைநகரில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 74 புள்ளிகளாகப் பதிவாகியது. இது திருப்தி பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், பூசா, ஐஜிஐ ஏா்போா்ட், சாந்தினி சௌக் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 104 முதல் 127 புள்ளிகளுக்குள் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

மழை தொடர வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.

ஜூன் 27-க்குள் பருவமழை: இதற்கிடையே, விவசாயத்திற்கு மிக முக்கியமான தென்மேற்குப் பருவமழை ஜூன் 27-ஆம் தேதி அல்லது ஒரிரு நாள்கள் முன்னதாக தேசியத் தலைநகா் தில்லியை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுவதாக காலநிலை மாற்றம் மற்றும் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமேட்டின் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளாா்.

தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை அன்று ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கியுள்ளது. அந்த மாநிலத்தின் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இந்த மழை இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பருவமழை அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் இருந்து எட்டு நாள்கள் தாமதமானது. இந்த மழை அடுத்த நான்கு நாள்களில் மாநில முழுவதையும் உள்ளடக்கும் என்று ராஞ்சி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாா்க்கண்டில் பொதுவாக பருவமழை ஜூன் 10-ஆம் தேதி தொடங்குவது வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com