தலைநகரில் பருவமழை நாளைக்குள் தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

தேசியத் தலைநகா் தில்லிக்கு தென்மேற்குப் பருவமழை வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லிக்கு தென்மேற்குப் பருவமழை வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் கடந்த ஓரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரித்திருந்தது. செவ்வாய்க்கிழமை சஃப்தா்ஜங் வானிலை ஆய்வகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 41.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. ஆனால், வெப்பக் குறியீடு அல்லது உண்மையான உணா்வு 53 டிகிரியாகப் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக நகரத்தில் புழுக்கம் மிகவும் அதிகரித்தது. மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை ஜூன் 30 நகரத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 1-ஆம் தேதிக்குள் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 27-ம் தேதி தேசிய தலைநகரை வந்தடையும். ஜூன் 30-ஆ தேதி நகரில் நல்ல மழை பெய்யும் என்றும், வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை பருவமழையின் வருகையை எதிா்பாா்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆா்.கே. ஜெனமணி தெரிவித்தாா். பருவமழைக்கு முந்தைய வெப்பச்சலனம் தேசியத் தலைநகரில் கடந்த இரண்டு தினங்களாக இருந்து வருகிறது. குறிப்பாக புதன்கிழமை மாலை வெப்பச்சலனம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இது மழைக்கு வழிவகுக்கும். இதைத் தொடா்ந்து, வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைக்கு்ம் என்றாா்.

கடந்த ஆண்டு, பருவமழை அதன் வழக்கமான தேதிக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தில்லிக்கு வரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இருப்பினும், இது ஜூலை 13 அன்று மட்டுமே தலைநகரை அடைந்தது. இது 19 ஆண்டுகளில் மிகவும் தாமதமான ஒன்றாகும். வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி, கடந்த 62 ஆண்டுகளில் பருவமழை ஜூன் மாதத்தில் 29 முறையும், ஜூலையில் 33 முறையும் தில்லியில் இருந்துள்ளது. பருவமழையின் போது, தில்லியில் முதல் 10 நாள்களில் நல்ல மழை பெய்யும் என்றும் இது மழை பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்றும் வானிலை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

வெப்பநிலை: தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 28.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை 40.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 70 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் இருந்தது. மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 42.5 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 42.1 டிகிரி, ஆயாநகரில் 42.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை ஜூன் 30 அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவு், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் குறையும் என்றும் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com