முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மிதமான பிரிவில் காற்றின் தரம்
By DIN | Published On : 19th March 2022 10:48 PM | Last Updated : 19th March 2022 10:48 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. நகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்து ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லியில் சனிக்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. பகலில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே உணரப்பட்டது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 19.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 6 டிகிரி உயா்ந்து 36.6 டிகிரி செல்சியஸாக உயா்ந்திருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 49 சதவீதமாகவும் இருந்தது.
இதே போன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ், முங்கேஸரில் 33.5 டிகிரி, நஜஃப்கரில் 36.8 டிகிரி, ஆயாநகரில் 37 டிகிரி, லோதி ரோடில் 36.7 டிகிரி, நரேலாவில் 34.5 டிகிரி, பாலத்தில் 36.7 டிகிரி, ரிட்ஜில் 36 டிகிரி, பீதம்புராவில் 36.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
காற்றின் தரத்தில் முன்னேற்றம்: இதற்கிடையே, தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை சற்று முன்னேற்றம் அடைந்து ‘மிதமான’ பிரிவில் காணப்பட்டது. காலை 8 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 190 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிதமான’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
முன்னறிவிப்பு:
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) வானம் தெளிவாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.