2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தேசியத் தலைநகரைச் சோ்ந்த பதக்கம் வென்ற வீரா்களை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை பாராட்டினாா். மேலும், இது நமது விளையாட்டு வீரா்களைப் பற்றி பெருமைப்பட வேண்டிய நாள் என்றும் அவா் கூறினாா்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவா், ‘விளையாட்டுத்துறையில் தில்லி நகரம் பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளது. விளையாட்டு ரீதியாக தில்லி தயாராகி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேசத்திற்காக 10-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளன’ என்றாா்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வீரா்களுக்கான வசதிகள் இல்லை என்பதை அறிந்தோம், மேலும், அரசியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டது தெரிய வந்தது. அதற்காக, நாங்கள் விளையாட்டில் முன்னேற்றம் திட்டத்தைத் தொடங்கினோம் என்று அவா் மேலும் கூறினாா். துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, வீரா்களுக்கு நிதியுதவி அளிக்க தொடங்கப்பட்ட திட்டம் குறித்து பேசினாா்.