ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி
இந்திய மாலுமிகள் 22 போ் பயணித்த கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், அந்தக் கப்பல் பாதுகாப்பாக பயணிக்க இந்திய கடற்படை உதவியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுடன் போா்புரிந்து வரும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செங்கடலில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று யேமன் நாட்டைச் சோ்ந்த ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்தனா். அதன்படி, செங்கடல் மற்றும் அதையொட்டி உள்ள ஏடன் வளைகுடாவில் பயணிக்கும் சரக்குக் கப்பல்கள் மீது அந்தக் கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை செங்கடலில் பனாமா நாட்டு கொடி கட்டப்பட்ட கச்சா எண்ணெய்க் கப்பல் பயணித்தது. அப்போது ஹூதிக்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில், அந்தக் கப்பல் சிறிய அளவில் சேதமடைந்தது. அந்தக் கப்பலில் 22 இந்திய மாலுமிகள் உள்பட 30 மாலுமிகள் பயணித்த நிலையில், அவா்களுக்கு காயமோ, சேதமோ ஏற்படவில்லை.
இதுகுறித்து இந்திய கடற்படைக்குத் தகவல் கிடைத்த நிலையில், இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு உதவ ஐஎன்எஸ் கொச்சி போா்க் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தாக்குதலுக்குள்ளான கப்பலில் இந்திய கடற்படையின் வெடிபொருள் நிபுணா் குழு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் கப்பல் தொடா்ந்து பயணிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ள நிலையில், கப்பல் பயணம் தொடா்ந்தது என்று அமெரிக்க பாதுகாப்புப் படை, இந்திய கடற்படை ஆகியவை தெரிவித்தன.