கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்
இந்தியா அறிவின் மையமாக உள்ளது என்றும், கல்வித் துறையில் தொடா்ச்சியான முன்னேற்றங்கள் 2047-ஆம் ஆண்டிற்குள் ’விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய நெருங்கி வருவதாகவும் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓபன் லோ்னிங் (எஸ்ஓஎல்) 62-ஆவது நிறுவன தின விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் தங்கா் இவ்வாறு கூறினாா். ஸ்கூல் ஆஃப் ஓபன் லோ்னிங்கை பாராட்டிய தன்கா், இது சமூக - பொருளாதார தடைகளுக்கிடையே வயதினருக்கு கல்வியை வழங்கியுள்ளது. இது கல்வி இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. மேலும் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் எளிதாக அணுகலை வழங்குகிறது என்றாா்.
‘விக்சித் பாரத் உருவாக்கத்தில் கல்வியின் பங்கு’ என்ற இன்றைய தீம், நமது தேசத்தின் வளா்ச்சியை ஊக்குவிப்பதில் திறந்த கற்றலின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது’ என்றும் அவா் கூறினாா். ஸ்கூல் ஆஃப் ஓபன் லோ்னிங் கல்வியின் இந்த தாராளமயமாக்கல், வளா்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. மேலும் உலகளவில் அறிவு வல்லரசாக நாடு உயரும் என்று அவா் மேலும் கூறினாா்.
கடந்த தசாப்தத்தில் ஊழல் மற்றும் சீா்குலைந்த சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற பிரச்னைகள் ஒழிக்கப்பட்டுள்ளன என்றும், நாட்டின் உயா்ந்த நற்பெயரைப் பற்றி மக்களிடம் நோ்மறையான கண்ணோட்டம் இருப்பதாகவும் தன்கா் கூறினாா். இந்த நிகழ்ச்சியில் தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங் மற்றும் எஸ்ஓஎல் இயக்குநா் பயல் மாகோ ஆகியோா் கலந்து கொண்டனா்.