திருநெல்வேலி, ஜூன் 10: திருநெல்வேலி மாநகர் பகுதியில் விற்கப்படும் மாம்பழங்களில் பெரும்பாலானவை கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதால், மக்களின் உடல்நிலை பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாம்பழ சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை இறுதி வரை இருக்கும். இந்த மாதங்களில் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் மாம்பழ விளைச்சல் முழு அளவில் இருக்கும்.
இந்தாண்டு மாம்பழ சீசன் வழக்கம்போல ஏப்ரல் மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டது. தொடக்கத்தில் மாம்பழங்கள் வரத்து அனைத்துப் பகுதியிலும் குறைவாக இருந்ததால், விலை அதிகமாக இருந்தது.
மேலும் சீசனும் முழுமையாக தொடங்காததால், திருநெல்வேலிக்கு 5 வகை மாம்பழங்களே விற்பனைக்கு வந்தன. மேலும், இந்த காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு திருநெல்வேலிக்கு 5 முதல் 6 டன் வரைதான் மாம்பழங்கள்தான் விற்பனைக்கு வந்தன.
தற்போது மாம்பழ சீசன் நன்றாக இருப்பதால், ஒரு நாளைக்கு 30 டன் மாம்பழங்கள் வரை திருநெல்வேலிக்கு விற்பனைக்கு வருவதாக பழ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் சுமார் 15 வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வருவதாகவும் அந்த வியாபாரி தெரிவித்தார்.
திருநெல்வேலிக்கு செங்கோட்டை, மணிமுத்தாறு, திண்டுக்கல், தேனி, போடி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.
இப் பகுதிகளில் கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு விளைச்சல் நன்றாக இருப்பதால் மாம்பழங்களின் விலை குறைவாக இருக்கிறது.
ஆனால், கடந்த ஆண்டைப் போல சுகாதார முறையில் மாம்பழங்கள் பழுக்கவைக்கப்பட்டு விற்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
திருநெல்வேலியில் உள்ள பெரும்பாலான மாம்பழக் கடைகளில் "கார்பைடு' கற்கள் வைக்கப்பட்டு மாம்பழங்கள் வைக்கப்படுகின்றன என பொதுமக்கள் கூறுகின்றனர்.
""இந்த கற்கள் அதிகமாக உமிழும் வெப்பத்தால், மாம்பழங்கள் விரைவாக பழுத்துவிடும். ஆனால் மாம்பழங்களுக்குள் கார்பைடு கற்கள் உமிழ்ந்த வெப்பம் இருக்கும். இதனால் இந்த மாம்பழங்களை சாப்பிடும் நபருக்கு வயிற்று வலி, வயிற்றுக்கு போக்கு, அல்சர், வயிற்று புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் '' என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த முறையில் மாம்பழங்கள் பழுக்கவைப்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இயற்கை முறையைவிட, இந்த முறையில் மாம்பழங்களை எளிதாக பழுக்க வைத்துவிடலாம் என்பதால் வியாபாரிகள் இதை கடைப்பிடிக்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் கார்பைடு கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா என மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பழக் கடைகளில் திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர். கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அழிக்கவும் செய்தனர்.
ஆனால், இந்தாண்டு கார்பைடு கற்கள் வைத்து மாம்பழங்களை பழுக்க வைக்கும் கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக கடந்த ஆண்டுகளைவிட கார்பைடு கற்கள் வைத்து மாம்பழங்கள் அதிகமாக விற்பனைக்கு வருகின்றன.
பொதுமக்களின் நலன் கருதி, இனிமேலாவது மாநகராட்சி அதிகாரிகள், கார்பைடு கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.